என்ன ஒரு நகைச்சுவை….
நன்றி: ஜெயமோகன்
http://www.jeyamohan.in/2847#.VTh_KyGqqko
பொய்யை திருப்பித்திருப்பிச் சொன்னால் அது உண்மையாகிவிடுகிறது என்பது இந்த உலகில் பல உண்மைகள் புழங்குவதிலிருந்து தெரிகிறது. இந்தப்பாதையில் பொய் கிட்டத்தட்ட உண்மையாக ஆகி நிற்கும் ஒரு பரிணாமப் படிநிலையை விளம்பரம் என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்கள். இப்பிரபஞ்சத்தில் எல்லாமே மூன்றுவகை இருப்புநிலைகள் கோண்டவை. இகம்,பரம்,விளம்பரம். நம்மிடம் இருப்பவை இகம். இல்லாதவை பரம். இருக்க நாம் ஆசைப்படுவையே விளம்பரம்.
எத்தனை முறைதிருப்பிச்சொன்னால் ஒரு பொய் விளம்பரமாக ஆகும் என்பதற்கு ஒரு கணக்கு இருக்கிறது. ‘அளக்கிறான் பயல்’ என்று கேட்பவர் நினைப்பதுதான் பொய். ”என்ன இது திருப்பித்திருப்பிச் சொல்றானே” என்று கேட்பவர் எண்ணும் போது அது விளம்பரமாக ஆகிவிட்டிருக்கிறது. ”அய்யோ அய்யோ…போதும்யா நிப்பாட்டு…கொல்லாதே” என்று கேட்பவர் கதறும்போது அது உண்மை ஆக வளர்சிதைமாற்றம் அடைந்திருக்கிறது.
விளம்பரம் என்பது தொன்மைக்காலம் தொட்டே இருந்துவந்திருக்கிறது. அப்போதெல்லாம் விளம்பர முகவர்கள் நேரடியாக நுகர்வோரை தேடிச்சென்று விளம்பரம் செய்தார்கள். உதாரணமாக ஞானப்பழத்தைக் கொண்டு சென்று ஈசன் குடும்பத்தில் விற்ற நாரதரை சொல்லலாம். மலைமீது ஏசு தியானத்தில் இருந்தபோது வந்து நின்று ஈரேழுபதிநான்கு உலகங்களின் அருமைகளைப்பற்றிப் பேசிய லூஸி·பரையும் சிறந்த விளம்பர முகவராகக் கொள்ளலாம்.